Monday, January 24, 2011

உயிருக்கும் உண்டு விலை...இங்கு காண்!

சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவரின் குடும்பத்திற்கு ஐந்து இலட்ச ரூபாய் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக மக்களுக்குத்தெரிய வேண்டியது இதுதான்:

மேற்கண்ட செலவினத்திற்காக இந்த நிதி ஆண்டில் தமிழக அரசு எத்தனை ரூபாய் ஒதுக்கியுள்ளது?

Sunday, January 23, 2011

BPA எனும் நஞ்சு (001)




BPA என்பது bisphenol A எனப்படும் வேதிப்பொருள்ஆகும். இந்த வேதிப்பொருளைக்கொண்டு கடினமான பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பாட்டில்களும், மழலையர்களுக்கான பீடிங் பாட்டில்களும் தயாரிக்கப்படுகின்றன.

மனித உடலில் மிகுதியாகச் சேரும் BPA இரத்தக்குழாய் சம்பந்தமான நோய்களையும் நீரிழிவு நோயையும் ஏற்படுத்தவல்லது. இந்த பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பாட்டில்களை தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு பயன்படுத்துவோரின் சிறுநீரில் BPA ன் அளவு 69 சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது தொடர்பான ஆய்வுகளை Harvard School of Public Health (HSPH) ஐச்சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் செய்துள்ளனர். பாலிகார்பனேட் பாட்டில்களை மாணவர்கள் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையான பாட்டில்களுக்கு மறுசுழற்சி எண் 7 தரப்பட்டுள்ளது. மேலும் இந்த BPA நஞ்சு பல்மருத்துவத்தில் பயன்படும் கூட்டுப்பொருள்களிலும், உணவையும் பானங்களையும் அடைக்கப்பயன்படும் அலுமினியக் குப்பிகளின் உட்பூச்சாகவும் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

BPA நஞ்சு உடலில் சேருவதால் பாலுணர்வு மழுங்குதல், பால்சுரப்பிகளில் மாற்றங்கள், விந்து உற்பத்திகுறைதல் ஆகிய குறைபாடுகள் தோன்றுகின்றன என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குளிர்ந்த பாட்டில்களை பயன்படுத்துவதைவிட சூடான பாட்டில்களை பயன்படுத்தும்போது விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கின்றன. HSPH ஐச்சேர்ந்த ஜென்னி கார்வில் என்னும் ஆராய்ச்சி மாணவர் ஏப்ரல் 2008ல் 77 மாணவர்களை இதுசம்பந்தமான ஆய்விற்கு உட்படுத்தினார். இந்த மாணவர்களுக்கு ஏழுநாட்களுக்கு எவர்சில்வர் பாத்திரத்தில் குடிப்பதற்கான பானங்கள் வழங்கப்பட்டன. அவர்களின் சிறுநீரில் BPA ன் அளவும் சோதிக்கப்பட்டது. அடுத்த ஒரு வாரத்திற்கு அவர்களுக்கு இரண்டு பாலிகார்பனேட் பாட்டில்களில் பானங்கள் கொடுக்கப்பட்டன. ஆய்விற்கு உட்பட்டவர்களின் சிறுநீரை மீண்டும் சோதித்தபோது BPAன் அளவு 69 சதவீதம் அதிகரித்திருந்தது கண்டறியப்பட்டது.

2008 ஆம் ஆண்டு கனடாவில் குழந்தைகளுக்கான பாலிகார்பனேட் பாட்டில்களில் BPA பயன்படுத்தப்படுவது தடைசெய்யப்பட்டுவிட்டது. சில உற்பத்தியாளர்கள் தாமாகவே முன்வந்து பாலிகார்பனேட் பாட்டில்களில் BPA ன் பயன்பாட்டை முற்றிலும் நீக்கிவிட்டனர். இந்த ஆய்வு இன்னும் தொடரப்படவேண்டும் என்றும் BPA ன் தாக்கத்தால் ஏற்படும் மார்பக புற்றுநோய், இனப்பெருக்கக் குறைபாடு இவற்றை ஆராயவேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


இன்னும் படிக்க:
http://www.sciencedaily.com/releases/2009/05/090521141208.htm

Saturday, August 21, 2010

தனியாரே வருக! ஏராளம் பெறுக!

சென்னையில் உள்ள அரசு பொதுமருத்துவமனையை சுத்தம் செய்யும் பணி தனியாரிடம் விடப்பட்டது.

மாதந்தோறும் ஏழு லட்ச ரூபாயை பெற்றுக்கொண்டது அந்த நிறுவனம்.

அந்த தனியார் நிறுவனத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் இயக்குநரே அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நமது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சொல்லியிருப்பது என்ன தெரியுமா?

“சென்னை மருத்துவமனையைப்போல், சென்னையின் மற்ற மருத்துவமனைகளைப்பராமரிக்கும் பணியையும் தனியாருக்கு கொடுக்க இருக்கிறோம். முறையாக செயல்படாவிட்டால் அவர்களுடைய ஒப்பந்தத்தை ரத்து செய்வோம்”

‘முறையாக செயல்படுவது’ என்பதன் பொருள் என்ன என்பதுதான் நமக்குள்ள ஐயம்.

அரசு செய்யவேண்டிய பணிகளை தனியாரிடம் தாரை வார்த்துக்கொடுத்துவிட்டு அரசு வேறு எந்த பணிகளை செய்யப்போகிறதாம்?

ஏற்கனவே, மக்கள் இலவசமாக அனுபவித்து வந்த கல்வித்துறையை தனியாரிடம் தாரைவார்த்துக்கொடுத்துவிட்டு அவர்களிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறது இந்த அரசு.

இப்போது மருத்துவத்துறையையும் தனியாரிடம் கொடுத்துவிட்டு மக்களை வாட்டி வதைக்கப்போகிறது இந்த அரசு.

ஏற்கனவே ‘கலைஞர் காப்பீட்டுத்திட்டம்’ என்னும் பெயரில் ஒரு இன்சூரன்ஸ் ஏஜண்ட் போன்று அரசு செயல்பட்டுவருகிறது.

மக்களின் வரிப்பணத்தில் அந்த தனியார் காப்பீட்டு நிறுவனம் ஓராண்டில் 200 கோடி ரூபாய் இலாபம் ஈட்டியிருக்கிறதாம்.

காப்பீட்டு அட்டையை அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒரு லாட்டரி சீட்டைப்பார்ப்பதுபோன்று பார்ப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன நிலையில் அரசு என்ன செய்யப்போகிறது.

அரசு உட்கார்ந்தே இருக்கிறது. அது எப்போது நிற்கும்? எப்போது நடக்கும்?

Friday, August 20, 2010

கூத்தாட்டம்...கூத்தாட்டம்

திரையரங்குகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை ஒரு நாளேடு இன்று வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறது.

திரையரங்குகளில் நடைபெறும் சுரண்டல்களையும், பகல் கொள்ளையையும் விசாரித்து ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்கவேண்டுமென மாநில மனித உரிமை ஆணையம் காவல்துறை ஆணையாளருக்கு உத்தரவிட்டிருக்கிறது.

சென்னையில் மட்டுமல்லாது, மாவட்டத்தலைநகரங்களில் உள்ள திரையரங்குகளிலும் இந்தக்கொள்ளை நோய் பரவிக்கொண்டிருக்கிறதாம்.

அதிநவீனத்திரையரங்குகளில் குறிப்பிட்ட இடங்கள் குறைந்த கட்டணத்தில், அதாவது பத்துரூபாய் கட்டணத்தில் அமையவேண்டும் என்பது அரசின் நிபந்தனை.

திரைக்குமுன்னால் உள்ள முதல்வரிசைக்கு கட்டணம் 10 ரூபாய்.

அதற்கான டிக்கெட்டுகளை திரையரங்கு நிர்வாகம் தாதாக்களின் உதவியோடு கூடுதல் விலைக்கு விற்றுக்கொண்டால் கேட்பதற்கு ஆளில்லை.

இந்த திரையரங்குகளில் அரசின் உத்தரவின்படி 100 ரூபாய், 120 ரூபாய் என்று இரண்டே வகையான கட்டணங்கள்தான் வசூலிக்கவேண்டும்.

ஆனால் படத்தில் நடித்த நடிகரின் தரத்திற்கேற்ப திரையரங்கு நிர்வாகம் இஷ்டம்போல் கட்டணம் நிர்ணயித்துக்கொள்கின்றனவாம்.

கட்டணக்கொள்ளை மட்டும் இல்லை.

மினரல் வாட்டர் பாட்டில் 40 ரூபாய்.

பாப்கார்ன் என்னும் சோளப்பொரி 50 ரூபாய்.

சாதாரண காபி 40 ரூபாய்.

வசதியானவர்கள் செலவழித்து சினிமா பார்க்கட்டும். வாங்கித்தின்னட்டும்.

வீட்டில் இருந்து கொண்டுபோகும் நொறுக்குத்தீனிகளுக்கு இந்த திரையரங்குகள் தடைவிதிக்க என்ன அதிகாரம் இருக்கிறது?

1000 ரூபாய் இருந்தால் ஒரு சிறுகுடும்பாம் சினிமாவிற்கு போகலாம்.

இல்லாவிட்டால் என்ன செய்யலாம்?

இருக்கவே இருக்கிறது திருட்டு டிவிடி. அதிலென்ன தவறு?

பகுத்தறிவாளர்கள் ஆட்சியில் பகுத்தறிவிற்கு ஒவ்வாத கட்டணமுறை.

அரசியல் தலைவர்களும், அவர்களது குடும்பத்தினரும் திரைப்படத்தொழிலில் ஏகபோக உரிமை செலுத்தத்தொடங்கிய பின்னர் இந்த மனித உரிமை மீறல்கள் திரையரங்குகளில் அரங்கேறத்தொடங்கியிருக்கின்றன.

தட்டிக்கேட்கும் அதிகாரம் உள்ளவர்கள் ஊமைகளாக இருக்கின்றனர்.

பொதுமக்களின் உதவிக்கு வந்துள்ள மாநில மனித உரிமை ஆணையத்திற்கு பாராட்டுகள்.

Sunday, August 15, 2010

பொறுமைக்கு எல்லையுண்டா?

ஒரு முன்னணி செய்தித்தாளில் வெளியாகி உள்ள தலையங்கம் நாகரிக உலகத்திற்கு விடப்பட்ட சவாலாகத்தெரிகிறது.

செய்தி இப்படிப்போகிறது......

நீங்கள் ஒரு முதியவராகவோ, மைனாரிட்டி சாதியைச்சேர்ந்தவராகவோ, ஆள் பலம் இல்லாதவராகவோ இருந்தால்....

உங்களுக்கு சொந்தமாக ஒரு வீடோ, நிலமோ நகரத்தின் முக்கியமான பகுதியில் இருந்தால்.....

ஒரு கூட்டம் அந்த சொத்தை அவர்களுக்கு விற்றுவிடுமாறு உங்களை வற்புறுத்தும்.

நீங்கள் மறுத்தால், சாம, பேத, தான, தண்டம் ஆகிய நான்கு முறைகளிலும் உங்களுக்கு தொல்லை தரும்.

உங்கள் வீட்டுப்பெண்களையும் அந்தக்கூட்டம் அச்சுறுத்தும்.

இறுதியில் விற்றுத்தொலைப்பது என்று முடிவு செய்துவிட்டால் விலையை அந்தக்கூட்டமே நிர்ணயிக்கும்.

50 லட்ச ரூபாய்க்கு விற்றுத்தருவதாக வாக்களித்து, உங்களிடம் அவர்கள் பெயருக்கு ஒரு பவர் பத்திரம் வாங்கிக்கொள்ளும்.

அந்தக்கூட்டம் தன்னுடைய செல்வாக்கைப்பயன்படுத்தி 100 லட்சத்திற்கு அந்த சொத்தை விற்கும்.

நிறைய செலவாகிவிட்டது என்றுகூறி உங்களுக்கு 30 லட்சம் கொடுக்கும்.

20 லட்சம் நடைமுறை செலவுகள் என்று உங்களிடம் கணக்கு ஒப்புவிக்கும்.

இந்தக்கொள்ளையில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும், இருந்தவர்களும் கூட்டாக இருக்கிறார்களாம். காவல்துறையும் இவர்களுக்கு உடந்தையாம்.

பாவப்பட்ட குடிமகனுக்கு கையை பிசைந்துகொள்வதைத் தவிர வழியில்லை என்கிறது இந்த தலையங்கம்.

ஒவ்வொரு மாவட்ட தலைகளும் அப்பகுதியின் குறுநில மன்னர்களாக நினைத்துக்கொண்டு கோலோச்சுவதை கட்சித்தலைமைகள் தடுத்து நிறுத்தவேண்டும் என்கிறது இந்த தலையங்கம்.

மக்களின் அச்சத்தை மாற்றவல்ல மாமருந்து வாக்குச்சீட்டு என்பதை அதிகாரத்தில் உள்ளவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.